ஆதாம் ஏவாள்

0
ஆதாம் ஏவாள்

யாதுமற்ற வெளியில்
ஆடைகள் களைந்த
அழகின் நிர்வாணம்...

வெட்கம் பாராட்டாத ஒளி
மேனியெங்கும்
திரையாகப் படர்ந்தது...

உச்சிப் பொழுதுகளில்
பரிமாறிக்கொண்ட
மதுமோகப் பார்வைகள்
அந்திவேளைகளில்
வண்ணம் பெற்றுப்
பரவசமாகின்றன...

ஆயுள் பத்திரிக்கையின்
முதல் பக்கம்
இந்தக் காதலைக் கொண்டே
அச்சடிக்கப்பட்டிருக்கிறது...

மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்
ஒவ்வொரு இரவும்
பிழையின்றி நிகழ்கிறது
ஒரு கோடி கூடல்கள்
விழாக்கால விருப்பத்துடன்...

நிலை மறந்து
மிதந்து செல்லும்
மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்
அதிகரித்துப் போகிறது
பல கோடி ஊடல்கள்
கடுங்குளிரின் நடுக்கத்துடன்...

குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...

இந்தக் காவியத்தின்
கடைசி வரி
துரிதகதியில் கொதிக்கும்
உயிர்த்திரவம் தொட்டு
எழுதப்படுகிறது...

ஆவி நோக
அழுது தீர்த்த
ஆழிவந்து சூழ
யுகம் யுகமாய்த் தீட்டிய
ஓவியத்தின் வண்ணங்கள்
தடயமின்றிக்
கரைந்து போகிறது
காற்று மட்டுமே சாட்சியாக...

முதலைத் தொடங்கியவர்களே
முடித்தும் வைக்கிறார்கள்...
வானமே ஆதாம்
பூமியே ஏவாள்...!

நன்றி